கொரோனா காலச் சிந்தனைகள்
பகுதி 2-ஆ
சீனாவின் அதிரடி தாக்குதல் எதிர்பாராத ஒன்று. 2015 ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை 2264 முறைகள் எல்லையில் ஒப்பந்தத்தை மீறிய துப்பாக்கி சூடு ( Cease fire violations) உயிர்ச் சேதம் இல்லை என இராணுவமும், அரசும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும் ஊடகங்கள் உறுதிப் படுத்துகின்றன. ஆனால் ஜுன் 6 மற்றும் 9 தேதிகளில் இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு வார்த்தை நடந்து துருப்புகள் பழைய இடத்திற்கு செல்ல உடன்பாடு ஏற்பட்டு விலக்கிக் கொள்ளும் நடவடிக்கை (Disengagement) ஜுன் 15 அன்று துவங்கிய போது இரவு ஏழு மணி அளவில் தள்ளு முள்ளு என ஆரம்பித்த மோதல், துப்பாக்கி வெடிச்சத்தமில்லாத, ஆனால் ஆணிகள் பதிக்கப்பட்ட குண்டாந்தடிகளால் மிருகத்தனமாக நமது வீரர்கள் தாக்கப்பட்டு அதில் 20 பேர் கொல்லப்பட்டனர் என்ற செய்தி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இச்சண்டை அடுத்த நாள் விடியற்காலை மூன்று மணி வரை நடந்ததாகச் செய்தி. இந்த அளவுக்கு சீனாவின் அணுகுமுறையில் ஏற்கமுடியாத மாறுதல் வருவதற்கான காரணங்களை இந்து ஆங்கில நாளிதழில் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகரும், முன்னாள் மேற்கு வங்க ஆளுநருமான எம்.கே.நாரரயணன் அவர்களும், முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலராக இருந்த நிருபமா ராவ் அவர்களும் எழுதிய கட்டுரைகள் பட்டியலிடுகின்றன.
அவற்றை அறியுமுன், 1962 போரில் தோற்ற இந்தியா, 1967 இல் நடந்த இரண்டாவது இந்திய-சீனப் போரில் வெற்றி அடைந்த செய்தியின் விபரங்களைப் பார்க்கலாம். இரு நாடுகளுக்கான போரில் ஒரு நாடு தோற்பதற்கும், எதிரி நாடு வெல்வதற்கும் பூகோள, அரசியல், இராணுவ ரீதியான பல அக, புற காரணங்கள் உண்டு. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி தலைமையிலான அச்சு நாடுகளின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய, ஆசிய நாடுகள் துவக்கத்தில் சரிந்தன. கோடிக்கணக்கான மக்கள் பலியாயினர். சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் பேரரசே பெருந்தோல்வியைச் சந்திக்க வேண்டி வந்தது. 1942 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் மீது தாக்குதலைத் தொடுத்த ஹிட்லரின் நாஜிப் படைகளால் சோவியத் நாட்டு மக்கள் அடைந்த இன்னல்களும், அந்நாட்டு ஆயிரக்கணக்கான கிராமங்களும், பெரு நகரங்களும் அடியோடு அழிக்கப்பட்டன. ஒன்னரை கோடி மக்கள் பலியாயினர். ஆனால் இறுதியில் பாசிசத்தை அடியோடு வீழ்த்தி வரலாறு படைத்தன நேச நாடுகள். ஸ்டாலின் நேச நாடுகளால் பாராட்டப்பட்டு வெற்றியைப் போற்றும் விதத்தில், கம்யூனிசம் ஒரு சாத்தான் எனத் தூற்றிய வின்ஸ்டன் சர்ச்சிலே வீரவாளை மற்ற நேசநாடுகள் சார்பாக அவருக்குப் பரிசாக அளித்தார். உலக மக்கள் முன் ஸ்டாலின் உயர்ந்து நின்றார். வெற்றிக்கும் தோல்விக்குமான பின்னணிகளை ஆய்வு செய்வது எதிர் காலத் திட்டத்திற்கான பாடமாக அமையும். தவறுகளைத் திருத்துவதற்கான வாய்ப்பாகவும் அமையும். அப்படித்தான் ஒவ்வொரு நாடும் அப்போருக்குப் பின் தங்கள் பலம் மற்றும் பலவீனம் என்ன என்பதை ஆய்வு செய்த அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கான நடவடிக்கையை மேற்கொண்டார்கள். யாரையும் துவக்க கால பின்னடைவுகளால் ஏற்பட்ட துயரங்களுக்காகப் பழி தூற்றவில்லை. அதை விடுத்து கீழான அரசியல் செய்து தனிப்பட்டவர்கள் மீது அவதூறு செய்வதும், அதன் மூலம் மக்களின் உணர்வைத் தூண்டி போலித்தனமான தேச பக்தியைக் காட்டிக் கொள்வதும் அரசியல் பிழைப்பு வாதமன்றி வேறொன்றுமல்ல. 1962 போரில் தோல்விக்கு நேரு என்ற தனி மனிதர்தான் காரணம்; அதனால் நம் எல்லையின் ஒரு பகுதியை இழந்தோம் எனத் தொடர்ந்து செய்து வந்த அவதூறு என்ற அம்பு இப்போது மோடி மேல் திரும்பிப் பாய்கிறது. 1962 தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்த அன்றைய நேரு அரசு, உடனடியான மாற்றங்களை இராணுவத்திலும்,அயல்கொள்கைகளிலும் கொண்டு வந்தது. இராணுவத் தலைமையில் மாற்றம்; ஏழு மலைப்பிரிவு படைக்குழுக்கள் உருவாக்கப் பட்டன. இராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு கணிசமாக உயர்த்தப்பட்டு வலிமை பெருக்கும் திட்டங்கள் விரைவாகச் செயலாக்கப்பட்டன. விளைவு? மீண்டும் 1967 இல் நடந்த இந்திய-சீனப் போரில் இந்தியா வென்றதுடன், சீனத் தரப்பிற்கு பெருஞ்சேதத்தை உண்டாக்கியது. சிக்கிம்- திபெத் எல்லைக்கு அருகே ஜும்பி பள்ளத்தாக்கில் இருந்த நாதுலா கணவாய் மற்றும் சோலா கணவாய் இரண்டிலும் முழுமையான உரிமையை சீனா கோரி வந்தது. இந்தியா தனது படைபலத்தை நன்கு பெருக்கியபின், நிரந்தர தீர்வுக்காக இக்கணவாய்களின் மீதான தனக்குள்ள எல்லைப் பகுதியில் முட்கம்பி வேலியை எடுக்க முனைந்தது. இவ்வேலை சீனாவின் ஆட்சேபத்தாலும், அதையொட்டி அவ்வப்போது ஏற்பட்ட தள்ளு முள்ளு போன பிறகு சிறு சிறு மோதல்களாலும் தடைப்பட்டது. இறுதியாக செப்டம்பர் 11, 1967 அன்று கம்பி வேலி வைக்கும் வேலையை சீனா மறித்ததையும் மீறி இந்திய இராணுவம் தொடர்ந்ததால், நிராயுதபாணியாக பணியில் ஈடுபட்ட இந்திய வீரர்கள் மீது எதிர்பாராத விதமாக துப்பாக்கி சூடு நடத்தி உயிர்ச் சேதத்தை விளைவித்தனர். ஆனால் உடனே சுதாரித்துக் கொண்ட இந்திய இராணுவம் திருப்பித் தாக்கத் தொடங்கியது. ஐந்து நாட்கள் நடைபெற்ற போரில், சீனா பின்வாங்க நேரிட்டது. லெப்டினன்ட் கர்னல் சகத் சிங் தலைமையிலான இப் போர் வீர காவியமானது. 1967 ஆம் ஆண்டு 1962 அல்ல என்பதை இந்தியா நிரூபித்தது. நாதுலா கணவாயில் நம் பகுதி உரிமை நிலைநாட்டப்பட்டது. சீனத் தரப்பில் பெரும் உயிரச் சேதம் ஏற்பட்டதை எவராலும் மறுக்க இயலவில்லை. அதே ஆண்டு அக்டோபர் முதல் நாள் சிக்கிம்-திபெத் எல்லையை ஒட்டிய சோலா கணவாய் மீது முழு உரிமை கொண்டாடி மீண்டும் போர் தொடுத்த சீனா, இந்தியாவின் பதிலடியால் பின் வாங்கியது. இவை எல்லாம் வரலாறு.
இதற்கு இரண்டாண்டுகளுக்கு முன் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரில், இராணுவத்தில் வலிமை மிக்கதாக அன்று உலகெங்கும் பேசப்பட்ட அமெரிக்க பேட்டன் டாங்குகளைப் பொடிப் பொடியாக்கியும், பாகிஸ்தானின், அமெரிக்க ஜாஃபர் ஜெட் விமானங்களுக்கு பெருத்த அழிவை ஏற்படுத்தியும், இந்திய இராணுவம், அமெரிக்காவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி, தன் வலிமையை பறைசாற்றியது. அப்போது லால் பகதூர் சாஸ்திரி பிரதமர். இந்நிகழ்ச்சிகளை வசதியாக சிலர் மறக்கலாம். ஆனால் அது வரலாறாக என்றும் நிலை பெறும்.
லால் பகதூர் சாஸ்திரி, இந்திய-பாகிஸ்தான் போரை ஒட்டி சோவியத் முயற்சியால் தாஷ்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்தான உடன் அங்கேயே அகால மரணமடைந்தார். அவருக்குப் பின் இந்திரா காந்தி பிரதமராகிறார். 1971 இந்தியா- பாகிஸ்தான் போர் பற்றி இங்கு விளக்கமாகப் பேசத் தேவை ஒன்றும் இல்லை. ஆனால் 1962,1967 போர்களுக்குப் பிறகு இந்திய அரசின் தீவிர முயற்சியால், சர்வ தேச உறவுகளை மேம்படுத்திக் கொண்ட அதே வேளையில் நேருவின் கூட்டு சேராக் கொள்கையிலிருந்து ஒரு நூல் கூட விலகவில்லை. இந்த உறுதி இந்தியாவுக்கு மிகப் பெரிய கவுரவத்தை உலக அரங்கில் ஏற்படுத்தித் தந்தது. அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை வாங்கினாலும், சோவியத் யூனியனோடு இருபதாண்டு கூட்டுறவு ஒப்பந்த ஆகஸ்ட் 1971 இல் கையெழுத்தானது. கிழக்கு பாகிஸ்தானில் 'கலாச்சார தேசியவாதம்' ஓங்கி, வங்க மொழியின் மீதான உருது மொழியின் மேலாதிக்கத்தை எதிர்த்த கிளர்ச்சி வலுப்பட்டு மேற்கு பாகிஸ்தானுடன் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டது. பாகிஸ்தான் இராணுவ ஆட்சியின் அடக்குமுறைக்கு ஆளாகி ஏறத்தாழ 5,00,000 கிழக்கு வங்காள மக்கள் கொல்லப்பட்டனர். கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்கு ஆதரவாக இந்திய உலக அரங்கில் எடுத்த முயற்சிகள் பாகிஸ்தான் இராணுவ ஆட்சியாளருக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. இதன் வெளிப்பாடு 1971 டிசம்பரில் இந்திய-பாகிஸ்தான் போராக வெடித்தது. டிசம்பர் 3 இல் துவங்கிய போர் டிசம்பர் 16 இல் பதினான்கு நாட்களில் டாக்கா வீழ்ந்ததோடு முடிவுக்கு வந்தது. கிழக்கு பாகிஸ்தான் மக்களின் 'முக்தி பாகினி' யும், இந்திய இராணுவமும் இணைந்து கிழக்கு பாகிஸ்தானை விடுவித்து, வங்க தேசம் (பங்களா தேஷ்) ஷேக் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் ஜனநாயக நாடாக மலர்ந்தது. பிரதமர் இந்திரா காந்தியை, அன்று பாராளுமன்றத்தில், வாஜ்பாய் அவர்கள், துர்க்கா தேவி என மனம் திறந்து பாராட்டினார். இந்தியாவின் இராஜ தந்திரம், இந்தப் போரில் சீனா எந்த விஷமத்தனமான வேலையையும் செய்ய இயலாமல் தடுத்தது. அன்று இந்திரா காந்தியை 'நேரு பேரரசின்
(Dynasty) இளவரசி' என யாரும் அவதூறு செய்யவில்லை.
போர் உச்ச கட்டத்தில் இருந்த போது, அமெரிக்காவின், வலுமிக்க ஏழாவது கப்பற்படை (USS Enterprises) இந்து மகா சமுத்திரத்திற்குள் பிரவேசித்தது. அணுஆயுதங்களைத் தாங்கிய ஏவுகணைகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைத் தாங்கிய அக்கப்பல் கூட்டம், கிழக்கு பாகிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டவரைப் பாதுகாப்பாக மீட்டுச் செல்ல அனுப்பி வைக்கப்பட்டதாக அமெரிக் 'நிக்சன்' அரசு அறிவித்தாலும், நோக்கம் இந்தியாவை அச்சுறுத்தவும், கிழக்கு பாகிஸ்தானின் விடுதலையை தடுக்கவும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் சோவியத் யூனியனின் இரண்டு குழுக்களாக விளாடிவாஸ்டக்கிலிருந்து, குரூயிஸ் மற்றும் டெஸ்ட்ராயர்களும் (Cruises and Destroyers) அணு ஆயுதம் தாங்கிய நீர் மூழ்கிக் கப்பலும் இந்து மகா சமுத்திரம் நோக்கி அனுப்பப்பட்ட செய்தி கிடைத்ததும், சூழ்நிலை தலைகீழாகப் போனது. டிசம்பரில் 18 ஆம் தேதி முதல் ஜனவரி, 1972 முதல் வாரம் வரை, ஏழாவது கப்பற்படையை சோவியத் கப்பல்கள் பின் தொடர்ந்த வண்ணம் இருந்தன. ஏழாவது கப்பற்படை வந்த சுவடு தெரியாமல் திரும்பியது. வங்க தேசம் மலர்ந்தது. இதனால் பாகிஸ்தானின் வலிமை பாதியாகக் குறைக்கப் பட்டது. இந்திரா காந்தி தலைமையிலான அரசுதான் இதைச் சாதித்தது. இந்த வரலாறை யாரும் மறைக்கவோ, மாற்றி எழுதவோ முடியாது. ஒரு மொழியைக் கொண்டு இன்னொரு மொழி மேல் ஆதிக்கம் செய்ய முனைந்தது ஒரு நாட்டையே இரண்டாகப் பிளந்ததில் முடிந்தது என்ற பாடத்தை நம்மில் யாரும் கற்கத் தவறக்கூடாது.
1967 இந்திய-சீனப் போரில் இந்தியத் தரப்பில் 80 வீரர்கள் பலியாயினர். சீனா ஏறத்தாழ 400 வீரர்களை இழந்தது. இதற்குப் பின், எட்டாண்டுகளுக்குப் பிறகு 1975 இல் நடந்த மோதல் குறிப்பிடத்தக்கது. '1967 இல் நடந்த போர்தான் கடைசியாக நடந்தது என்பதும், 1975 இல் நடந்தது ஒரு சிறு விபத்து என்பதும் உண்மையுடன் ஒத்துப் போகாத ஒன்று', என முன்னாள் வெளியுறவுச் செயலரும், சீனாவில் இந்தியத் தூதராகப் பணியாற்றியவருமான நிருபமா ராவ் கூறியிருந்தார். இத்தாக்குதல் அக்டோபர் 20, 1975 அன்று அருணாசலப் பிரதேசத்தில் துலுங் (Tulung La) கணவாய்ப் பகுதியில் நடந்தது. அஸ்ஸாம் ரைஃபிள் பிரிவைச் சேர்ந்த ஆறு வீரர்கள் வழக்கமான ரோந்துப் பகுதியில் ஈடுபட்டிருந்த போது, சீனப் படைக்குழு இந்தியப் பகுதிக்குள் வந்து கல்சுவரைக் கட்டி, அதற்குப் பின் ஒளிந்திருந்து தாக்கியதாகக் கூறப்பட்டதை சீனா மறுத்தது. எட்டு நாட்களுக்குப் பிறகு அவரது உடல்கள் மீட்கப்பட்டன. ஏறத்தாழ ஐநூறு மீட்டர் இந்தியப் பகுதிக்குள் ஊடுருவி இத் தாக்குதல் நடத்தப் பட்டது உறுதி செய்யப்பட்டது. அந்த ஆண்டு சிக்கிம் 22வது மாநிலமாக, அந்நாட்டு மக்கள் ஓட்டெடுப்பு மூலம் விருப்பம் தெரிவித்து மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த பின், இந்தியாவுடன் இணைந்தது. சீனா, சிக்கிமை இந்தியா இணைத்துக் கொண்டதாகக் கூறி, அதை ஏற்க மறுத்தது. இந்த இணைப்பும், சீனாவின் ஒளிந்திருந்து தாக்குதல் நடத்தக் காரணம் என்ற கருத்தும் நிலவுகிறது. இந்த மோதல் நடந்த பின் 45 ஆண்டுகளில் எந்த உயிர்ச் சேதமும் இல்லை என்ற சாதனை நிலை இப்போது முறியடிக்கப்பட்டு பெரும் மோதலும், போருக்கான பதற்றமும் எல்லையில் ஏற்பட்டுள்ளது. என்ன காரணம்? பார்ப்போம்.