பாரதியும், பகத்சிங்கும்
பாரதி வாழ்ந்த காலத்தில் அவருக்குக் கிடைத்திருக்க வேண்டிய உரிய அங்கீகாரம் இறந்த பிறகுதான் வந்தது. அதற்குப் பல காரணங்கள். குறிப்பாக அவரது ஏழ்மை. அவர் பிறந்த குலம் கிட்டத்தட்ட அவர்களது சமூகத்திடமிருந்து ஒதுக்கியே வைத்திருந்தது. அவரை ஆதரித்து உதவியவர்கள் பெரும்பாலும் அவர் ஜாதிக்கு அப்பாற்பட்ட சமூகத்தின் கீழடுக்கைச் சார்ந்தவர்களே. மகாத்மா காந்தியை சென்னைக் கடற்கரை கூட்டத்திற்கு அழைக்கச் சென்றவரின் யதார்த்தமான செய்கைகள், அங்கிருந்தோரை அதிர்ச்சியுறச் செய்தது. இராஜாஜி அவரை மகாத்மாவுக்கு அறிமுகம் செய்து வைத்ததாகச் சொல்லப்படுகிறது. கூட்டத்திற்கு வர இயலாததை மகாத்மா தெரிவித்ததும் பாரதி அங்கிருந்து மிடுக்கோடு வெளியே போனார். இராஜாஜியைப் பார்த்து, 'இவர் நாட்டின் பொக்கிஷம். பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்', என சொன்னார். சொன்ன சொற்களில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் நிகழ்வு உண்மையே. அவர் செய்தித்தாள் ஆசிரியராக, கவிஞராக மிளிர்ந்தார் எனினும் ஆங்கில அரசால் தொடர்ந்த கண்காணிப்புக்கும், சிறையிடப் படுதலுக்கும் ஆளாகி, புதுச்சேரியில் அடைக்கலம் தேட வேண்டியதாயிற்று. பாரதியின் வாழ்க்கை வரலாறை சொல்வது நோக்கமல்ல. இறுதியில் அவர் சென்னையில் இறந்த போது அவரை அடக்கம் செய்யச் சென்றவர்கள் எண்ணிக்கை, தமிழ் கூறும் நல்லுலகம் அம்மாபெரும் கவிக்குத் தந்த அங்கீகாரத்தை பறைசாற்றும். போலித்தனமும், சமூகத்தில் பட்டம், பதவி, பணம் மூலம் பெறும் செல்வாக்குமே சமூக அந்தஸ்தை தீர்மானிக்கும். அதை அடையும் முயற்சியில் வெற்றி பெற்றவர்கள் பெரிய மனுஷர்களாக வலம் வருவது எக்காலத்திற்கும் பொருந்தும் போலும்! பாரதி இச்சூதறியா ஏழைச் சாமானியன்.
ஆகவே வறுமையினின்றும் அவன் குடும்பம் இறுதி வரை மீளவில்லை.
மறைந்த பின், அவனுக்குக் கிடைத்த அங்கீகாரத்தில் நூறில் ஒரு பங்கு, அவன் உயிரோடிருந்த போது கிடைத்திருந்தால் இன்னும் ஓர் இருபது, முப்பது ஆண்டுகள் வாழ்ந்திருப்பான். இன்னாது அம்ம இவ்வுலகம்!
தமிழகமும், இந்தியாவும் கொண்டாடத் துவங்கியபின் வந்த இளைய தலைமுறை பாரதியைப் புரட்சிக் கவிஞனாகவும், முற்போக்குச் சிந்தனையாளர்களின் அடையாள நாயகனாகவும் தமிழ்நாட்டில் உயர்த்திக் காட்டி தங்களையும் உயர்த்திக் கொண்டனர். அவன் வாழ்ந்த போது தாங்கள் பிறக்கவில்லையே என கவிஞர் பட்டாளமும், அறிஞர் பெருமக்களும் குமுறாத நாளில்லை. குமுறும் அளவைப் பொறுத்து 'முற்போக்குச் சந்தையில்' அவர்களது விலை எகிறியது. கவியரங்கங்கள், பட்டிமன்றங்கள், கருத்தரங்குகளில் எல்லாம் பாரதியின் அழியா கவிதைகளை ஏற்ற இறக்கங்களோடு முழக்கி 'மார்க்கெட்டில்' தங்கள் 'ரேட்'டை உயர்த்திக் கொண்டனர். அவன் உயிரோடிருந்து வறுமைத் தீயில் கருகிய போது அவனை வாழ்விக்க வராத தமிழகத்தில், அவன் மறைந்த பின் பலருக்கு தன் கவிதைகளால் வாழ்வித்தான். அவன் இல்லாததால் யாருக்கும் பிரச்சினை இல்லை; இருந்திருந்தால் இப்போதைய சூழ்நிலையில், 'ஜாதிகள் இல்லையடி பாப்பா; குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்' எனப் பாடிய அக் கவிஞன் படும் பாட்டை கற்பனை செய்தாலே மனம் கலங்குகிறது. பிஜித் தீவுக்கும், ஏனைய நாடுகளுக்கும் பிழைப்பு தேடிச் சென்று கற்பைப் பறி கொடுத்த ஏழைப் பெண்கள் உற்ற துயர் பாரதியின் மனதைக் கலக்கியது. கரும்புத் தோட்டத்தில் பட்ட துயரை கண்ணீர் வழிய பாடியவன் பாரதி. நம் நாட்டின் எல்லை தாண்டி உலகில் நடந்த நிகழ்வுகள் பால் கருத்தைச் செலுத்தியவன். ஆகவேதான் மாகாளி கடைக்கண் வைத்ததால் எழுந்ததாக, ஜார் ஆட்சி வீழ்ந்ததை யுகப் புரட்சி என அவனால் அடையாளம் காண முடிந்தது.
பகத்சிங்! இளம் வயதில் வயதுக்கு மீறிய சிந்தனை. கேளாக் காது படைத்த பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குத் தங்கள் குரலை கேட்கச் செய்திட பாராளுமன்றத்தில் ஆளைக் கொல்லாமல், அதிர்வேட்டு போட்டவன். அவனும் அவன் நண்பர்களும் தண்டிக்கப்பட்டனர். தூக்கு மேடைப் பரிசு. வாழத் துடிக்கும் இளம் வயதில் சாகத் துடித்த நாத்திகன். தூக்கு மேடைக்குச் செல்ல வேண்டிய நாளுக்கு முதல் நாள் இரவில் சிறையில் மார்க்ஸோடு உரையாடிக் கொண்டிருந்தவன். ஆம்! சிவப்பு புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தான். மார்க்சிய சித்தாந்தம் அவன் சிந்தனையைக் கவ்விப் பிடித்திருந்தது.
காந்தி- இர்வின் ஒப்பந்தத்தில் ஓர் அம்சமாக, நிபந்தனையாக அவனது விடுதலை பேசப் பட்டிருந்தால் அவன் தூக்கில் தொங்க வேண்டியது தவிர்க்கப் பட்டிருக்கும். தீவிரவாதம், தீவிரவாதியோடு அழிய வேண்டும் என்பது எழுதாத விதி! அந்த வயதிலேயே கூரிய சிந்தனை இருந்ததால்தான் 'நான் ஏன் நாத்திகன்?' என்ற நூலை எழுத முடிந்தது. பகுத்தறிவாளனாக மிளிர்ந்த அவன் இராஜபாட்டையில் நடைபோடவில்லை. பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய் ஊர்வலத்தில் தாக்கப்பட்டு படுகாயமுற்ற சில நாட்களில் மரணமுற்றார். அக்கொடுமையைத் தாங்காத அவனும் அவன் நண்பர்களும் ஆயுதமேந்த வேண்டி வந்தது. இன்றும் அவனது வீரமும், தியாகமும் ஒப்புயர்வற்று விளங்குகிறது.
இவர்கள் இருவர் பற்றியும் குறிப்பாக இங்கு இப்போது சொல்ல வேண்டிய அவசியம் ஏன்? ஒளிமிகுந்த மேடைகளில் வலம் வந்து நித்தம் தாங்கள் யார் என்பதை பாமரர்களுக்கும், படித்த மேட்டுக்குடி மக்களுக்கும் அறிமுகம் செய்து கொள்பவர்கள் 'நாங்கள் பாரதி பரம்பரை, பகத்சிங் பரம்பரை' நெஞ்சு புடைக்க விம்மி முழங்குவதைப் பார்க்க முடிகிறது. 'பாரதி இழுத்த தேர் வடம் இங்கு வீதியில் கிடக்கிறது, பற்றிப் பிடித்து தேரினை இழுக்க ஊர் கூடி வாருங்கள்' என ஓங்கியழைக்கும் குரல்கள் இன்றும் ஓய்வதில்லை. பகத்சிங் பற்றிப் பேசும் போதும் கழுத்து நரம்புகள் புடைக்க முகம் சிவக்க பகத்சிங்கே எழுந்து வந்ததுபோல் ஆடும் சாமியாட்டத்திற்கும் குறைவிருக்காது. அப்படியே அவர்கள் பரம்பரை பெருமை பேசட்டும்! ஆனால் கொஞ்சமேனும் அவர்களைப் போல் சமூக அக்கறை, அநீதி கண்டு வெகுண்டெழும் பண்புகளோடு செயல்பட வேண்டாமா?
பாரதியைப் போல ஒரு கவிஞன் வர வர ராவ், மனித உரிமைச் செயல் பாட்டாளர் சுதா பரத்வாஜ், ஆனந்த் டெல்டும்லே உள்ளிட்ட பதினொரு பேர் சுதந்திர இந்தியாவில் எழுபது ஆண்டுகளுக்குப் பிறகும் புல்லாய், புழுவாய், பூச்சிகளாய் சிலர் கண்களுக்குத் தெரியும் மனிதர்களுக்காய் தளராது குரல் கொடுப்பவர்கள். இன்று கறுப்புச் சட்டங்களால் சிறைக் கொட்டடிக்குள் அடைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். குற்றப் பத்திரிக்கை மட்டுமே வழங்கப்பட்டு விசாரணைக் கைதிகளாய் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தனிமைச் சிறையில் வாடும் கவிஞர் வர வர ராவ் 81 வயதில் முதுமையில் வரும் வியாதிகளோடு கொரோனாவால் பாதிக்கப்பட்டும் பிணையில் விட மறுத்தது மட்டுமன்றி மருத்துவ மனையில் சேர்ப்பது பற்றிய பொறுப்பு இன்றி மகாராஷ்ட்டிர அரசு இருந்தது. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பிணை தர பரிசீலித்த நேரத்தில், வழக்கின் விசாரணையை மத்திய அரசின் என்.ஐ.ஏ அமைப்பு நேரடியாக எடுத்துக் கொள்வதாக அறிவிக்கிறது. விளைவு? பிணையில் வருவதற்கான வாயில் முற்றாக அடைபட்டுவிட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டது ஏன் என்பதும் அது பற்றிய பின்னணியும் ஒரு பக்கம் இருக்கட்டும். சிறைக் கைதிகளுக்கான உரிமைகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டதா என்பதுதான் கேள்வி.
சிறுமிகளை, இளம் பெண்களைக் கதறக் கதறக் கற்பழித்தும், கொலை செய்தும் தொடர் குற்றங்களைச் செய்த சாமியார்கள், காவிப் போர்வையில் புகுந்து கொண்டு கோவில்களுக்குள் சிறுமிகளைக் கடத்தி, கற்பழித்த ஆளும் கட்சி அரசியல் வாதிகள் எளிதில் வெளிவர சட்டம் இலகுவாக இருக்கிறது. நீதிமன்றங்களில் உயர் நிலையில் இருக்கும் நீதியரசர்கள், ஓய்வு பெற்றபின் உயர் பதவிகளைப் பெற நீதியை வளைத்து உதவவும் தயாராக இருக்கிறார்கள் என்பது பற்றிய செய்திகள் கொஞ்சம் நஞ்சம் நீதிமன்றங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையையும் இழக்கச் செய்கிறது. ஏழை எளியவர்கள் என்ன செய்வார்கள்?
அவர்களுக்காகக் குரல் எழுப்பும் மனித நேயம் மிக்கவர்கள், சுகமான வாழ்க்கை வாழ்வதை விட்டு அவர்களுக்கானப் போராட்டத்தில் வலிந்து கொடும் தண்டனைகளுக்கும், சிறைக் கொடுமைகளுக்கும் ஆளாவதை நம்மால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
பாரதியும், பகத்சிங்கும் இன்னும் நூற்றுக்கணக்கான மாமனிதர்களும் செய்த தியாகங்களைப் போற்றிப் புகழ்வதோடு அவர்கள் வாரிசுகள் நாங்கள் என்றும், வழி வந்தவர்கள் என்றும் மேடைதோறும் முழங்குவதன்றி வேறென்ன செய்கிறோம்? நம் காலத்தில் நம் முன் வாழ்கின்ற தியாகிகளை, கதியற்ற மக்களுக்காய் வாழ்க்கையை அர்ப்பணம் செய்பவர்களை கிஞ்சித்தும் நினைப்பதில்லை. காங்கிரஸ் தீவிரவாதக் குழுவில், திலகர் தலைமையை ஏற்று செயல்பட்டவர்கள் பாரதியும், வ உ சி யும் அவர்களைச் சார்ந்தவர்களும். அதனாலேயே அவர்கள் வாழ்ந்த காலத்தில் சமரசமற்ற போராட்டங்களை நடத்தியதாலும், அரசியல் ரீதியான ஆதரவில்லாததாலும் வெள்ளை அரசாங்கத்தின் நேரடித் தாக்குதல்களுக்கு ஆளாகினர். இன்று அவர்களைக் கொண்டாடி நம்மை அவர்களோடு அடையாளப் படுத்துவதோடு நின்று விடுகிறோம். அந்நாளையப் புறக்கணிப்பாளர்களைப் போலவே நாம் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி, அவர்களிடமிருந்து விலகிப் பாதுகாப்பான நிலையில் நம்மை இருத்திக் கொண்டு போலிப் புரட்சி பூபாளம் இசைத்து பிழைப்பை நடத்துகிறோம். ஆனாலும் அக் கொடுமைகளுக்கு ஆளாகும் மனிதர்களுக்காய் குரல் கொடுக்கும் சக மனிதாபிமானிகள் இப்போதும் நம் கண் முன்னே உலவத்தான் செய்கிறார்கள். மனம் தளராது அமைதியாக ஆனால் மனத் திண்மையோடு பாசிச அரசை எதிர்த்து அவர்கள் நடத்தும் கருத்துப் போருக்கு சில சமயங்களில் நீதிமன்றங்கள் அசைந்து கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகிறது. மேலே குறிப்பிட்ட அம் மாமனிதர்களை, விடுவிக்க வரலாற்றாளர் ரொமிலா தாப்பர் முதல் தன்னார்வச் செயல்பாட்டாளர்கள், அறிஞர் பெருமக்கள், அருந்ததி ராய் வரை அரசுக்கும், நீதிமன்றங்களுக்கும் விடுகின்ற வேண்டுகோள்களின் நியாயங்கள், தாமதமானாலும் மருத்துவ மனையில் சேர்ப்பதற்கும், பிணையில் வெளிவருவதற்கான வாய்ப்புகளை உருவாக்கவும் இன்று உதவியிருக்கிறது. இந்தக் குழுவினரின் அங்கமாக, கட்சி அரசியலுக்கு அப்பால், மனித உரிமைப் பாதுகாவலர்களாக என்று மாறப் போகிறோம்?
அந்நாளே, பாரதியும், பகத்சிங்கும், அவர்கள் போன்ற மாவீரர்களின் படை வரிசையில் அணிவகுக்கும் வீரர் நாம் எனச் சொல்ல நம்மைத் தகுதியாக்கும் நாள்.
எண்ணித் துணிவோம்! உண்மை வாரிசுகளாய் மிளிர்வோம்!