Monday, July 13, 2020

கொரோனா காலச் சிந்தனைகள்
                    பகுதி-3-அ
     விற்பதற்கு வேறென்ன  
                 இருக்கிறது?

பொதுத்துறை நிறுவனங்கள் இலாபம் ஈட்டவில்லை, தனியார் நிறுவனங்கள் போல் செயல் திறன் மிக்கவையாக இல்லை. இதை சரி செய்யவும் இயலாது என்ற செய்தியை பொது வெளியில் ஆழமாகப் பதிய வைத்ததில் ஆளுங்கட்சிகளுக்கு (யார் ஆட்சிக்கு வந்தாலும்) குறிப்பிடத்தக்கப் பங்கு எப்போதும் இருந்து வந்துள்ளது. ஒரு காலத்தில், பொதுத்துறைகளின் தேவைகள் உரத்துப் பேசப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் மட்டுமே சில துறைகள் இருக்கவேண்டும் என்பது கோட்பாடாகவே வரையறுக்கப்பட்டது. ஆனால் காலம் செல்லச்செல்ல தாராளமய, உலகமய நெருக்கடிகள் இவைகளின் பால் இருந்த ஆட்சியாளர்களின் பார்வையை மாற்றச் செய்தன. பன்னாட்டு நிறுவனங்களின் ஊடுருவலும், உற்பத்தி முறைகளும், உற்பத்தி சக்திகளின் முக்கியத்துவத்தை வெகுவாகக் குறைத்தன. பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகத் திறமையின்மை, மனித வள மேம்பாடு பற்றிய போதிய அனுபவமின்மை, முடிவெடுப்பதில் உள்ள சிவப்பு நாடா முறை, தொழிற்சங்கப் போட்டி அரசியல், அனைத்திற்கும் மேலாக இந்திய சமூகத்தில் நீக்கமற நிறைந்து புரையோடிப் போன ஊழல்கள் எல்லாம் சேர்ந்து பொதுத்துறையை சிதலை தினப்பட்ட ஆலமரமாக்கின. விளைவு? பொதுத்துறை மீதான மறுவாசிப்பைச் செய்ய, புதிதாய்ப் பிறந்த தனியார் துறைகள், ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி சாதுர்யமாக இந்திய அரசுக்கு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தினர். இதன் விளைவாக, ஆளுங்கட்சி ஆவதற்கான ஆசையில், தேர்தலுக்கு முன்பாக, கோடிக்கணக்கான ரூபாய்களைத் தேர்தல் நிதியாகத் தந்த கார்ப்பரேட் முதலைகளுக்கு இரகசிய வாக்குறுதிகளை தந்த கட்சிகள், ஆட்சிக்கு வந்ததும், செய்ந்நன்றி மறவாமல், வாக்குறுதிகளை முற்போக்கு கொள்கை முடிவுகளாக அறிவித்தனர். அவர்களுக்குச் சாதகமான பல கொள்கை முடிவுகளில் பொதுத்துறையை தனியாருக்கு மாற்றிக் கொடுப்பதற்கான ஏற்பாட்டை விரைந்து செய்து கொடுப்பதும் ஒன்று. 

கொரோனாத் தொற்றின் போர்வையில், மக்கள் வெளிவர முடியாத ஊரடங்கைப் பயன்படுத்தி, ஒன்று திரண்டு போராடமுடியாத சூழலை சாதகமாக்கி பிஜேபி தலைமையிலான மத்திய அரசு காய்களை மிக வேகமாக நகர்த்துகிறது. இதன் விளைவுதான் பலமான அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்துவதற்கான அடுக்கடுக்கு அறிவிப்புகள்.

விடுதலைக்குப் பிறகான இந்திய நாட்டின் துரித வளர்ச்சியில் சோவியத் ஒன்றியத்தின் வழியிலான ஐந்தாண்டுத் திட்டங்கள் கணிசமான பங்கை செலுத்தின. அரசுத் துறையின் கட்டுப்பாட்டில் பிரதானமாக தகவல் தொடர்பு, இரயில்வே, பாதுகாப்பு, சுரங்கங்கள், காப்பீடு போன்ற துறைகள் வந்தன. கனரகத் தொழில்கள் மற்றும் உற்பத்தித் துறைகளில் தனியார் அனுமதிக்கப்பட்டனர். பொதுத்துறையை வளர்க்கவும், பொருளாதார வளர்ச்சியில் வலிமையான பங்காற்றவும், அப்போதைய மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்தது. படிப்படியாக எண்ணெய், உருக்கு, அலுமினியம் போன்ற உலோக உற்பத்தித் துறைகள், ஆயுள் காப்பீடு ஆகியவை பொதுத்துறை நிறுவனங்களாக வளர்ச்சி பெற்றன.  மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் ஏறத்தாழ 280 நிறுவனங்கள் பொதுத்துறையாக செயல் படுகின்றன. மத்திய அரசுத் துறை நிறுவனங்களாக தபால், தந்தி இயங்கியது. நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் தந்த பரிந்துரைகள் அடிப்படையில், தபால், தந்தித் துறை, 1985 ஜனவரி ஒன்று அன்று இரண்டாகப் பிரிக்கப்பட்டு அஞ்சல் துறை, தொலைத்தொடர்புத் துறை என தனித்தனியே ஆனால் அரசுத்துறைகளாகவே தொடர்ந்தன.  இரயில்வே மற்றும் பாதுகாப்புத் துறைகளும் அரசுத்துறைகளாகவே செயல்பட்டு வருகின்றன. 

உலக அளவில்  டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட அசுர வளர்ச்சி தொலைத்தொடர்புத் துறையையும் பாதித்தது. அதற்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியத் தொலைத்தொடர்புத் துறை உள்ளாகியது. தொலைத்தொடர்பில் செல் தொலைபேசியின் வருகை, எதிர் பாராத பிரம்மாண்டமான மாற்றத்தை ஏற்படுத்தியது. இராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ், வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங் காலத்தில் புதிய தொலைத்தொடர்பு கொள்கைகள் அடுக்கடுக்காக அறிவிக்கப்பட்டு மின்னல் வேகத்தில் நடைமுறைக்கு வந்தன. தொழில்நுட்ப மாற்றங்கள் ஆட்குறைப்புக்கு வழி செய்யும் என தொடர்ந்து நடத்தப்பட்ட வறட்டுத் தனமான 'தொழிற்சங்க அரசியல்' எடுபடாமல் போனது. கிராமமாய்ச் சுருங்கிய உலகில், இந்தியா தனித்து நிற்க முடியாது என்பதை அப்போது யாரும் உணரவில்லை. ஆனால் செல் தொலைபேசியைப் பயன்படுத்தி முதல் அழைப்பில் மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு அவர்கள் 1995, ஜூலை 31 அன்று, அன்றைய மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த சுக்ராம் அவர்களோடு கொல்கத்தாவிலிருந்து பேசினார். மோடி டெல்ஸ்ட்ரா செல் கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரி B.K.மோடி உடன் இருந்தார். பின்னர் இந்தக் கம்பெனி 'ஸ்பைஸ்' என பெயர் மாற்றப்பட்டு முதல் செல் சேவையை இந்தியாவில் வழங்கியது. 

தொலைத்தொடர்பு சேவையில் தனியார் நுழைவை அனுமதிக்க அரசு கூறிய காரணங்கள் விவாதத்திற்குரியவை என்றாலும் 90 களில் ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடியும், அசுரவேக மாற்றத்தை ஏற்று முன்னேற வேண்டிய கட்டாயமும் தவிர்க்க முடியாதவையாக ஆகியது. தனியார் சேவை முதலில் கம்பிவழி தொலைபேசி இணைப்பைத் தருவதற்கு அனுமதிக்கப் பட்டாலும், வேகமாய்ப் பாய்ந்து வந்த செல் வழிச் சேவையைத் தரவே பல தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டினர். மீண்டும் புதிய தொலைத்தொடர்புக் கொள்கை வகுக்கப்பட்டு, தனியார் சேவைகள் துவங்கியது. ஸ்பைஸ், ஏர்டெல், ஏர்செல், டெலிநார், வோடோஃபோன், ஐடியா என புற்றீசல்களாய் வந்த அனைவரும் இந்தியத் தொலைத்தொடர்பு சேவையைப் பங்கிட்டுக் கொண்டனர். அரசின் ஏகபோகமாய் இருந்த தொலைத்தொடர்புச் சேவையில் தனியாரை அனுமதித்த மத்திய அரசு, அரசுக் கட்டுப்பாட்டில் இருந்த தொலைத்தொடர்புத் துறைக்கு மட்டும் செல் வழி தொலைபேசிச் சேவையேத் தருவதற்கான உரிமைத்தை மறுத்தது. தனியாரோடு போட்டியிடத் தயார் என்ற நிலையில், இவ்வாறு மறுத்ததுதான், அரசுத்துறையின் மீது விழுந்த முதல் அடி. அதன் பிறகு எடுத்த கொள்கை நிலைகள் இத்துறையின் வளர்ச்சியை சீரழிக்கத் துவங்கின. ஊழியரின் கடும் எதிர்ப்பு ஒரு புறம் இருந்தாலும் மக்களுக்கு தொலைபேசி கிடைப்பதில் இருந்த தாமதங்கள், புதிய செல் தொழில்நுட்ப வருகை, அவர்களைத் தனியார் சேவை நோக்கி இழுத்துச் சென்றன. நாம் கூப்பிடும் அழைப்புகளுக்கு மட்டுமன்றி, நமக்கு வரும் அழைப்புகளுக்கும் கட்டணம் செலுத்த வேண்டிய புது முறை யாருக்கும் அதிர்ச்சி ஊட்டவில்லை. இந்நிலையில், அரசாங்கம் தொலைத் தொடர்புத் துறையை பொதுத்துறையாக மாற்ற கொள்கை முடிவெடுத்தது. இது ஒரே நாளில் எடுக்கப்பட்ட முடிவல்ல. 1970 இல் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போதே, நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் (Administrative Reforms Commission) தபால், தந்தித் துறை சீர்திருத்தம் பற்றிய ஆய்வின் மேல் தனது பரிந்துரைகளைத் தந்தது. தபால், தந்தித் துறையை இரண்டாகப் பிரிப்பது பற்றியும், தந்தித் துறையை மட்டும் பொதுத்துறையாக மாற்றுவது பற்றியும் தனது விரிவான அறிக்கையைத் தந்தது. அதன்படி அப்போதைய சூழ்நிலையில் எந்த மாற்றங்களும் தேவை இல்லை என முடிவாக அறிவித்தது. தேவை வரும் போது, பரிசீலிக்க மத்திய அரசும் முடிவு செய்தது. 1985 இல் துறை இரண்டானது. ஏப்ரல் 1986 இல் வெளிநாட்டு சேவை (OCS), VSNL என மாற்றம் பெற்று பொதுத் துறையானது. அதே ஆண்டு, டெல்லி, மும்பை உள்நாட்டு சேவைகள் டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட MTNL  என்ற பொதுத்துறையாக மாற்றப் பட்டது. இறுதியில்   2000 அக்டோபர் ஒன்று முதல்,  எஞ்சியிருந்த உள்நாட்டு சேவை BSNL என்று மூன்றாவது பொதுத்துறையாக மாற்றப் பட்டது. நாளடைவில்  VSNL டாடா டெலிகம்யூனிஸ்கேஷன் சர்வீஸ் என டாடாவின் கைகளுக்குப் போனது. 

அக்டோபர் 2000 இல்  BSNL என மாற்றப்பட்டாலும் செல் வழிச் சேவையைத் தருவதற்கான உரிமம் 2003 க்குந் பிறகே வழங்கப்பட்டது. இலாபம் தரக்கூடிய பகுதிகள் அனைத்தும் தனியார் கைகளில். எஞ்சிய பகுதிகளில், மக்களுக்கான செல் சேவை கிடைக்காத பகுதிகளில் சேவையைத் துவங்க வேண்டிய அவல நிலை ஏகபோகமாக இருந்த BSNL க்கு வந்து சேர்ந்தது. இச்சவால்களைத் தாங்காது BSNL வீழ்ந்து விடும் என கார்ப்பரேட் முதலாளிகள் கனவு கண்டனர். கொள்கைக் குழப்பங்கள், முடிவு எடுப்பதில் தாமதம், எல்லையற்ற ஊழல், ஒட்டுமொத்த திறமையின்மை, தொழிற்சங்கங்களுக்கு இடையேயான ஒற்றுமையின்மை அனைத்தும் சேர்ந்து இலாபம் ஈட்டிவந்த BSNL துறையை நட்டத்திற்குள்ளாக்கின. ஆண்டுக்கு ஆண்டு வருவாய் இழப்பு அதிகமாகிக் கொண்டு வர ஆரம்பித்தது. இந்த இடத்தில் ஒன்றை மறந்து விடக்கூடாது. BSNL செல் சேவை தர அனுமதிக்கப்பட்ட
பிறகுதான் செல் கட்டணம் குறைக்கப்பட்டு எளிய மக்களுக்கும் எட்டும் சேவையாக செல் சேவை மாறியது.



No comments:

Post a Comment